விமானம் ரத்து
கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு வரும் மே 15ம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடைவிதித்துள்ளது. ஐபிஎல்-காக சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் மே15 வரை நாட்டில் நுழைய அனுமதி கிடையாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
கவலை
இதனால் ஐபிஎல்-ல் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என 38 பேர் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அவர்களை அங்கிருந்தே தாய் நாட்டிற்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே அதற்காக அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.
கிளம்பும் தேதி
இந்நிலையில் அவர்களின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மே 15ம் தேதி அனுமதி கிடைத்துவிடும் என்பதால் வரும் மே 16ம் தேதி தனி விமானம் மூலம் அனைவரும் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐபிஎல் அணிகளிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. முதலில் மலேசியா செல்லும் அவர்கள் அங்கிருந்து சிட்னிக்கு செல்லவுள்ளனர். அங்கு சென்ற பிறகு அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தபடவுள்ளனர்.
ஒருவருக்கு மட்டும் சிக்கல்
ஆஸ்திரேலியர்கள் அனைவரும் தாய் நாடு திரும்பினாலும், சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹசியின் நிலைமை மட்டும் சிக்கலாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மைக் ஹசி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா நெகட்டீவ் என வந்தாலும், அவர் மாலத்தீவில் இருந்து சக வீரர்களுடன் செல்ல முடியாது. ஏனென்றால் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மாலத்தீவில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹசியை நேரடியாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது.