
ஒத்திவைப்பு
கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 31 ஆட்டங்கள் மே 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக வருண்சக்கரவர்த்தி, அமித் மிஸ்ரா, சஹா உள்ளிட்ட 4 வீரர்களுக்கும் பயிற்சியாளர்கள் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.

மீண்டு ஐபிஎல்
இந்நிலையில் ஐபிஎல் தெடரில் மீதமுள்ள 31 லீக் ஆட்டங்களை டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. அந்த தொடரில் பங்கேற்க அயல்நாட்டு வீரர்கள் இந்தியா வருவார்கள். எனவே அந்த நேரத்தில் மீதமுள்ள போட்டிகளை நடத்த வியூகம் வகுத்து வருகிறது.

டி20 உலகக்கோப்பை
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், டி20 உலகக்கோப்பைக்கு பிறகு அயல்நாட்டு வீரர்கள் பிசியாக இல்லாமல் இருந்தால், கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்திருந்தால் நிச்சயம் மீதமுள்ள ஐபிஎல் தொடர் நடத்தப்படும். அப்படி ஒரு வேளை கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.

புது சிக்கல்
இது ஒரு புறம் இருக்க, இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் உலகக்கோப்பை தொடரையே இந்தியாவில் நடத்தக்கூடாது என முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே உலகக்கோப்பையே இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல் நிலவும் சூழலில் பிசிசிஐ ஐபிஎல்-க்கு திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications