ஐபிஎல் தொடர்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மோசமாக உள்ள காரணத்தால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
27 நாட்கள் விண்டோ
இதற்கு முன்னர் 10 டபுள் ஹெட்டர்ஸ் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அமீரகத்தில் கடும் வெயில் இருக்கும் என்பதால் டபுள் ஹெட்டர்ஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே போட்டி நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் உள்ள 31 போட்டிகளை, 27 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருக்கும் பிரச்னை
இந்நிலையில் ஐபிஎல்-க்கு இருக்கும் சிக்கல் குறித்து காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமீரகத்தில் சர்வதேச விமானங்கள் வருவதற்கு ஜூலை 21ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது பெரிய பிரச்சினையாக உள்ளது. அணிகள் தங்களுக்கான ஹோட்டல்களை முன்கூட்டியே புக் செய்ய வேண்டும். வீரர்களிடம் சீக்கிரமாக ஒப்பந்தங்களை போட வேண்டும். இதுமட்டுமல்லாமல் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சி அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதனால் ஹோட்டல்களுக்கான தொகையும் அதிகரிக்கும்.
ஹோட்டல்
எங்களுக்கு ஹோட்டல்களை புக் செய்வது கூட பெரிய பிரச்சினையாக இல்லை. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது தான், எங்களின் பணிகளை தாமதமாக்கி வருகிறது. ஹோட்டல்கள் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பிசிசிஐ எப்போது ஐபிஎல் தேதிகளை அறிவிக்கின்றதோ, உடனடியாக நாங்களும் பணிகளை தீவிரப்படுத்திவிடுவோம் எனக்கூறியுள்ளார்.