தோனி வீட்டில் கொரோனா
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் தாய் தேவகி தேவி, தந்தை பன் சிங் இருவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் தற்போது ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இன்றைய போட்டி
ஆனால் இந்த இக்கட்டான சூழலிலும் கேப்டன் தோனி நேற்று சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. மேலும் அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பபுளில் இருந்து மற்ற போட்டிகளில் பங்கேற்பார் என்றும் ராஞ்சிக்கு செல்ல மாட்டார் எனவும் கூறப்பட்டது.
ப்ளெம்மிங் விளக்கம்
இந்நிலையில் தோனியின் பெற்றோரின் நிலை குறித்து சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் பேசியுள்ளார். அதில் அவர், சிஎஸ்கே அணியின் சார்பாக தோனிக்கும் அவரது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அவரின் குடும்ப நிலையை நாங்கள் அறிவோம். தோனியின் பெற்றோர்கள் தற்போது சீராக உள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. அவர்கள் அடுத்த சில நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். தோனிக்கு தேவையானதை கொடுப்பதற்கான கடமை எங்களுக்கு உள்ளது. அவரின் பெற்றோர் விரைவில் நலம்பெற வேண்டும்.
கடினமான காலம்
இது அனைவருக்கு கஷ்டமான காலமாகும். இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா ஐபிஎல் வீரர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அணியின் பபுளுக்குள் நுழைய முடியாது. வீரர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் நாங்கள் தனி குழு அமைத்து ஆலோசித்து வருகிறோம்.