ஐபிஎல் தொடர்
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் குறையாத காரணத்தினால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் போட்டியே அதிரடி
சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த அணிகளை முதல் போட்டியில் மோதவிட்டால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கடைசி லீக் போட்டியாக கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஆகஸ்ட் 10
ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால் அதற்கான ஏற்பாடுகளில் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் அணிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று முன்னேற்பாடுகள், பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனக்கூறியுள்ளது. அப்படி பார்த்தால் ஐபிஎல் தொடரில் மிக வலுவான அணியாக கருதப்படும் சிஎஸ்கேவில் வீரர்கள் பலரும் தற்போது ஓய்வில் உள்ளனர். பல்வேறு வீரர்கள் சர்வதேச தொடர்கள் எதிலும் பங்கேற்காமல் உள்ளனர். எனவே அவர்கள்தான் முதலில் அமீரகம் செல்வார்கள் எனக்கூறப்படுகிறது.
சிஎஸ்கேவில் இணைந்த தோனி
அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீபத்தில் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. குடும்பத்தினருடன் ஜாலி டூரில் இருந்து வந்த தோனி தற்போது புத்துணர்ச்சியுடன் அணியில் இணைந்துள்ளார். இதுகுறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீரர்களின் வருகை
தோனி மட்டுமல்லாமல் இன்னும் சில இந்திய வீரர்களும் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளனர். இலங்கை தொடரில் இருந்த தீபக் சஹார், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் மற்றும் சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, கரண் சர்மா உள்ளிட்டோரும் சிஎஸ்கேவில் இணைந்துள்ளனர்.
புறப்படும் தேதி
இந்நிலையில் அவர்கள் அமீரகம் புறப்படும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் வீரர்கள் சிலர் வரவேண்டியுள்ளதால், வரும் ஆகஸ்ட் 13ம் தேதியன்று தனி விமானம் மூலம் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்கள் கடந்தாண்டு ஐபிஎல்-ன் போது தங்கியிருந்த அதே ஓட்டலில் தங்கி பயிற்சியை தொடங்கவிருக்கின்றனர். கடந்த முறை பின்பற்றியதை போன்றே முன்கூட்டி பயிற்சியை தொடங்கினால் போட்டியில் நல்ல ஃபார்மில் களமிறங்கலாம் என தோனி திட்டமிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் அணியில் பல வீரர்கள் எந்தவித கிரிக்கெட்டிலும் விளையாடாமல் உள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிப்பது சிறந்ததாக இருக்கும் எனவும் அவர் எண்ணியுள்ளார்.
மேட்ச் விவரம்
ஐபிஎல் தொடரில் துபாயில் 13 போட்டிகள், ஷார்ஜாவில் 10 போட்டிகள், அபுதாபியில் 8 போட்டிகள் என 31 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் ஒரு போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கும் மற்றொரு போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். மற்றபடி இரவுப்போட்டிகள் அனைத்தும் 7.30 மணிக்கு நடைபெறும்.