
ஐபிஎல் தொடர்
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது.

முன்னேற்பாடுகள்
ஐபிஎல்-க்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அதற்கான முதற்கட்ட பணிகளில் அணி நிர்வாகங்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. வழக்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் முதலில் பயிற்சி முகாமை தொடங்கும். அதன்படி இந்தாண்டு சிஎஸ்கே தான் முதலில் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தது. அதற்காக சர்வதேச தொடர்களில் பங்குபெறாமல் உள்ள இந்திய வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா உள்ளிட்டோரும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். சிஎஸ்கே அணியினர் நாளை ( ஆகஸ்ட் 13ம் தேதி) தனி விமானம் மூலம் அமீரகம் புறப்பட ஏற்பாடு செய்துள்ளது.

சைலண்ட் மும்பை இந்தியன்ஸ்
இது ஒருபுறம் இருக்க மும்பை இந்தியன்ஸ் அணியின் சைலண்டாக வீரர்களை அமீரகம் அனுப்ப திட்டமிட்டு வருகிறது. அதுவும் சிஎஸ்கே திட்டமிட்டுள்ள அதே ஆகஸ்ட் 13ம் தேதி அனுப்பவுள்ளது. இதற்காக அணி வீரர்களை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்பரேட் பார்க்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்காக பயோ பபுளும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அமீரகம் சென்றால் பபுள் டூ பபுள் மாற்றமே இருக்கும்.

புறப்படுவதில் சிக்கல்
இந்நிலையில் இந்த இரண்டு அணியுமே திட்டமிட்டபடி அமீரகம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளின் விமானம், அமீரகத்தில் தரையிறங்குவதற்கு இன்னும் அந்நாட்டு அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இந்தியா இன்னும் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதால் விமான போக்குவரத்தில் கடும் விதிமுறைகளை அமீரக அரசு விதித்துள்ளது. எனினும் வீரர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விட்டது எனக்கூறி பிசிசிஐ அனுமதி பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

சிஎஸ்கே விளக்கம்
இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணி செயல் தலைவர் காசி விஸ்வநாதன், எங்களுக்கு இன்னும் தரையிறங்கும் அனுமதி கிடைக்கவில்லை. பிசிசிஐ-யிடம் தொடர்ந்து இதுகுறித்து கேட்டு வருகிறோம். பிசிசிஐ-ம் அமீர அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்றைக்குள் அனுமதி கிடைத்துவிட்டால் நாளை புறப்பட்டுவிடுவோம் எனக்கூறியுள்ளார்.

மேட்ச் விவரம்
ஐபிஎல் தொடரில் துபாயில் 13 போட்டிகள், ஷார்ஜாவில் 10 போட்டிகள், அபுதாபியில் 8 போட்டிகள் என 31 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் ஒரு போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கும் மற்றொரு போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். மற்றபடி இரவுப்போட்டிகள் அனைத்தும் 7.30 மணிக்கு நடைபெறும்.


Click it and Unblock the Notifications











