வார்னரை நீக்கியதற்கு பின்னால் மணிஷ் பாண்டே பஞ்சாயத்து.. அணிக்குள் சண்டை.. சர்ச்சை கிளப்பிய ஸ்டெயின்!
அகமதாபாத்: வார்னரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு பின்னர் மணிஷ் பாண்டேவின் பஞ்சாயத்து நடந்துள்ளதாக டேல் ஸ்டெயின் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிக மோசமாக அமைந்துள்ளது. இதனால் அந்த அணி மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இதன் காரணமாக ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி பறிப்பு
கேப்டன் பதவி பறிக்கப்பட்ட டேவிட் வார்னர், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ப்ளேயிங் 11ல் கூட இடம் பெறவில்லை. கேப்டனாக சொதப்பியிருந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக டேவிட் வார்னர் வழக்கம் போல் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். 6 போட்டிகளில் விளையாடிய அவர் 193 ரன்கள் அடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அந்த அணி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

ஸ்டெயின் கேள்வி
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டதற்கு பின்னால் மர்மம் உள்ளதாக தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அணிக்குள் எதோ பிரச்னை நடந்துள்ளது. ஆனால் அது என்னவென்று சரியாக தெரியவில்லை. ஒருவேளை டேவிட் வார்னர் அணி நிர்வாகம் எடுத்த முடிவுகளை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கலாம்.

பாண்டே பஞ்சாயத்து
மணிஷ் பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் வார்னர் அந்த முடிவை தான் எடுக்கவில்லை என்றும், அணி நிர்வாகமே அதனை எடுத்ததாகவும் உண்மையை உடைத்திருந்தார். இதனால் அணி நிர்வாகம் கோபமடைந்திருக்கலாம். அணியில் விளையாடப்போவது எந்தெந்த வீரர்கள் என்பதை கேப்டன் முடிவெடுக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் அந்த அதிகாரம் பறிக்கப்படுகிறது. இதனால் அணிக்குள் மிகப்பெரும் பிரச்னை ஏதோ நடைபெற்றுள்ளது. ஆனால் மக்களுக்கு அது தெரியவில்லை.

இதுதான் கடைசி
வார்னர் ப்ளேயிங் 11ல் கூட இடம்பெறவில்லை என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. ஐதராபாத் அணி அடுத்தாண்டு கேப்டனை மாற்றுவார்களோ, வில்லியம்சனையே வைத்திருபார்களோ என்பது தெரியவில்லை. ஆனால் டேவிட் வார்னரை ஐதராபாத் அணியில் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும் என ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications