
சன்ரைசர்ஸ் அணி
ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கோப்பையையும் வென்று கொடுத்தவர் டேவிட் வார்னர். ஆனால் இந்த ஆண்டு அணி நிர்வாகத்திற்கும் வார்னருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டேவிட் வார்னரும் ஒதுக்கப்பட்டு வருகிறார்.

ஓரம்கட்டப்பட்ட வார்னர்
இதற்கு வார்னரின் மோசமான ஃபார்மும் காரணமாக கூறப்படுகிறது. இந்தாண்டு 8 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். ஆனால் அனுபவ வீரர் என்றும் பாராமல் அவரை உட்காரவைப்பது சரியல்ல என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கேற்றார் போல ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார்.

வார்னருக்கு அநீதி
ப்ளேயிங் 11ல் இருந்து ஒதுக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு, ஐதராபாத் அணி நிர்வாகம் மேலும் ஒரு அநீதியை இழைத்தது. அதாவது போட்டிகளின் போது வார்னர், ஐதராபாத் அணி வீரர்களுடன் டக் அவுட்டில் கூட அமராமல், ரசிகர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதன் மூலம் பிரச்னை எந்த அளவிற்கு இருந்தது என்பது ரசிகர்களுக்கு புரிந்தது. எனவே இனி ஐதராபாத் அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்த வார்னரும், இனி அணியில் பார்க்க முடியாமல் கூட போகலாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

வார்னரின் பதிவு
இந்நிலையில் ஐதராபாத் அணி ரசிகர்களுக்கு வார்னர் உறுக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதில், இனிமையான நினைவுகளை உருவாக்கியதற்கு மிக நன்றி. எங்கள் அணி 100 சதவீத உத்வேகத்துடன் முன்னேறி சென்றது ரசிகர்களின் ஆதரவால் தான். எனவே உங்களின் ஆதரவுக்கு நான் எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது. மிகப்பெரிய பயணமாக அமைந்தது. என்னுடைய குடும்பமும், நானும் உங்களைப் பிரிந்து மனவருத்தம் அடைகிறோம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இனி வார்னர் ஐபிஎல்-ல் இல்லை
34 வயதாகும் டேவிட் வார்னர் தற்போது பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் வார்னரை நிச்சயம் ஐதராபாத் அணி தக்கவைக்காது என்பது உறுதியாகிவிட்டது. எனவே அவரை பல கோடி ரூபாய் செலவிட்டு ஏலம் எடுப்பதற்கு அணிகள் முன்வருமா என்பது சந்தேகம் தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் கசப்பான சம்பவத்திற்கு பிறகு மீண்டும் ஐபிஎல்-க்கு அவரே வர விரும்பாததாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











