
இன்றைய ஐபிஎல்
இந்த போட்டிக்கு இன்று மிகப்பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அதாவது ஐதராபாத் அணியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜனுக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் சேர்ந்து விஜய் சங்கரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே இன்றைய போட்டி நடைபெறுமா என்பதில் சிக்கல் நீடித்தது. ஆனால் திட்டமிட்டபடி நிச்சயம் நடக்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பல்வேறு சாதனைகள்
இந்நிலையில் ஒரு புறம் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படவுள்ளன. டெல்லி அணிக்காக விளையாடி வரும் அமித் மிஸ்ரா, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற இன்னும் 5 விக்கெட்களே வேண்டும். தற்போது வரை இலங்கை வீரர் லசித் மலிங்கா எடுத்த 170 விக்கெட்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. அமித் மிஸ்ரா தற்போது 166 விக்கெட்களுடன் உள்ளார். எனவே இன்னும் 5 விக்கெட்களை எடுத்தால் சாதனை படைப்பார்.
Recommended Video

4000 ரன்கள்
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அமித் மிஸ்ரா பங்கேற்றால், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதே போல பேட்டிங்கிலும் டெல்லி அணிக்கு முக்கிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரகானே இன்னும் 59 ரன்களை அடித்தால் ஐபிஎல்-ல் 4000 ரன்களை கடப்பார்.

ஐதராபாத் வீரர்களின் வாய்ப்பு
இதே போல ஐதராபாத் அணியிலும் பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சாதனைகள் காத்துள்ளன. அந்த அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா இன்னும் 13 ரன்கள் அடித்தால் ஐபிஎல்-ல் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதே போல பவுலிங்கில் சித்தார்த் கவுல் இன்னும் 2 விக்கெட்களை கைப்பற்றினால் ஐதராபாத் அணிக்காக 50 விக்கெட்களை பூர்த்தி செய்வார்.


Click it and Unblock the Notifications











