
சிஎஸ்கே மீது விமர்சனம்
சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான கம்பேக் கொடுத்து முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், கடந்த 2 போட்டிகளாக தொடர் தோல்விகளை பெற்று வருகிறது. ப்ளே ஆஃப் சுற்று நெருங்கிவிட்ட இந்த சூழலில் இப்படி மோசமாக தோற்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தோனியின் மோசமான பேட்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனிங் ஜோடி முதல் பந்துவீச்சில் கடைசி பவுலர் வரை அனைவருமே மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியின் போதும், ஒவ்வொரு வீரர் பொறுப்பை எடுத்துக்கொண்டு வெற்றி பெற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் தோனியின் நிலைமை தான் மோசமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே தோனி பேட்டிங்கில் திணறி வருகிறார். அவருக்கு வயதாகிவிட்டது, இனி பேட்டிங் செய்ய சரிபட்டு வரமாட்டார் என்பது கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலேயே தெரிந்தது. எனவே அவர் இந்தாண்டுடன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோனியின் கடைசிப்போட்டி
ஆனால் தனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும் என்றும் அங்கு விளையாடிய பின்பு தான் ஓய்வு பெறுவேன் என்றும் தோனி சமீபத்தில் அறிவித்தார். இதனால் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது உறுதியானது. இந்நிலையில் இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது ஃபிட்னஸ் குறித்து தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

ப்ளேயரா? வீரரா?
அதில் அவர், உடற்தகுதியை தொடர்ந்து சிறப்பாக வைத்துக்கொண்டு வருவது என்பது சிரமமான ஒன்று. ஆனால் நீங்கள் என்னை அடுத்தாண்டு சிஎஸ்கே அணியின் உடையில் நிச்சயம் பார்க்கலாம். ஆனால் அந்த அணிகாக விளையாடுவதற்காக இருப்பேனா என்பதில் சந்தேகம் தான். அடுத்தாண்டு இரண்டு புதிய அணிகள் வரவிருக்கின்றன.

காத்திருப்போம்
இதனால் மெகா ஏலத்தின் போது எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு அணியிலும் எத்தனை அயல்நாட்டு வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் தங்கவைக்கப்படுவார்கள் என்பதில் குழப்பம் உள்ளது. நம்மால் எதையும் முடிவு செய்ய முடியாது. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் எது நடந்தாலும் அனைவரின் நன்மைகாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications











