
சொதப்பிய சிஎஸ்கே
இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 13 (13), ஃபாஃப் டூ பிளஸி 10 (8), ராபின் உத்தப்பா 19 (19) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் வந்தவேகத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் அம்பத்தி ராயுடு சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அசத்தினார். மறுமுனையில் கேப்டன் மகேந்திரசிங் தோனி 27 பந்துகளில 18 ரன்கள் எடுத்தார். இதனால், சிஎஸ்கே 20 ஓவர்களில் 136/5 ரன்கள் மட்டுமே அடித்தது.

த்ரில் வெற்றி
எளிய இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியும் தொடக்கம் முதலே ரன்களை சேர்க்க திணறியது. ஓப்பனிங் வீரர்கள் பிரித்வி ஷா 18 (12), ஷ்ரேயஸ் ஐயர் 2 (7), ரிஷப் பண்ட் 15 (12) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ரிபல் படேல் 18 (20), ரவிச்சந்திரன் அஸ்வினும் 2 (3) நடையைக் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நம்பிக்கையாக விளையாடி வந்த ஷிகர் தவானும் 39 (35) அவுட் ஆகி, அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இறுதியில், சிம்ரான் ஹெட்மையர் 18 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதனால், டெல்லி அணி 18.4 ஓவர்கள் முடிவில் 139/7 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தோனியின் விளக்கம்
இப்போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 150 ரன்கள் வரை சேர்க்க எதிர்பார்த்தோம். ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட்களை பறிகொடுத்துவிட்டோம். பின்னர் 15-16 வது ஓவர்களில் நல்ல அடித்தளம் அமைத்தோம். ஆனால், அதனை எடுத்துச் செல்ல தவறிவிட்டோம். இப்படிப்பட்ட மைதானங்களில் ரன்களை சேர்ப்பது கடினம். 150 ரன்கள் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும் எனத் தெரிவித்தார்.

அதிக ரன்கள் கசிந்தது
பவுலிங் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. நாங்கள் விரும்பும் ஷாட்களை இங்கு அடித்து விளையாட முடியாது. டெல்லி அணியிலும் பேட்ஸ்மேன்கள் இதே பிரச்சினைகளை சந்தித்தனர். பவர் பிளேவில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்க கூடாது என முடிவு எடுத்திருந்தோம். ஆனால் ஒரு ஓவரில் மட்டும் அதிக ரன்கள் கசிந்தது. அதுவே முக்கிய காரணமாக அமைந்தது. தரமான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும்போது இப்படி நடப்பது இயல்புதான் என அவர் கூறினார்.

மறைமுக சாடல்
பவர் ப்ளேவின் போது தோனி கூறிய அந்த ஓவரே திருப்புமுணை கொடுத்தது. அந்த ஓவரை வீசியவர் தோனியின் ஆஸ்தான வீரரான தீபக் சாஹரே ஆகும். பவர் ப்ளேவில் 5வது ஓவர் வரை நன்றாக சென்றுக்கொண்டிருக்க 6வது ஓவரை தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், ஒரு சிங்கிள் என மொத்தம் 21 ரன்கள் கசிந்தது. இதையே தோனி மறைமுகமாக தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் தீபக் சஹார் இல்லாததால் தோல்வியடைந்தோம் எனக்கூறிய அவர், இந்த போட்டியில் அவரின் ஓவர் தான் தோல்விக்கு காரணம் எனக்கூறியிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











