அவர் செஞ்ச ஒரு தப்பு.. ஆட்டத்தையே புரட்டிப்போட்ட பந்து.. சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி!
டெல்லி: டுப்ளசிஸ் செய்த ஒரே ஒரு தவறு சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 218/4 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 219/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்கம்
இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியின் வெற்றிக்கு கெயிரன் பொல்லார்ட் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 35 ரன்களுக்கும் , டிகாக் 38 ரன்களும் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவும் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

அதிவேக அரைசதம்
அணிக்கு தேவையான நேரத்தில் களமிறங்கிய கெயிரன் பொல்லார்ட் தொடக்கம் முதலே சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்து வந்தார். சாம் கரண், ஷர்துல் தாக்கூர், லுங்கி நெகிடி என அனைவரின் ஓவர்களும் பவுண்டரிகளுக்கு பறந்தது. அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பொல்லார்ட் அதிரடி
தொடர்ந்து மிரட்டிய அவர் 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை விளாசி மும்பையின் வெற்றிக்கு வழிவகுத்தார். 18வது ஓவரிலேயே பொல்லார்ட்டை அவுட்டாக்க சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் டுப்ளசிஸ் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் சொதப்பினார்.

தவறவிடப்பட்ட வாய்ப்பு
18வது ஓவரில் தாக்கூர் வீசிய 5வது பந்து, பொல்லார்ட் பேட்டில் டாப் எட்ஜாகி நேராக டுப்ளசிஸிடம் சென்றது. ஆனால் ஃபீல்டிங்கிற்கு பிரபலமான டுப்ளசிஸ் அதனை கேட்ச் பிடிக்காமல் கோட்டை விட்டார். இது சிஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் பின்னர் ஆட்டத்தின் 20 ஓவரில் மும்பைக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதிரடி மன்னன் பொல்லார்ட், 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர், ஒரு டபுள் ஓட்டம் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.


Click it and Unblock the Notifications