ஐபிஎல் போட்டிகள்
இந்தியாவில் கோலாகலமாக நடந்து வந்த ஐபிஎல்-ன் முதல் பகுதி போட்டிகளை காண பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அமீரகத்தில் தற்போது கொரோனா அச்சுறுத்தல்கள் குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான டிக்கெட் விற்பனைகளும் சூடுபிடித்து வருகிறது. அமீரகத்திற்கு செல்ல முடியாதவர்கள் உலகமெங்கிலும் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் மொபைல் செயலிகள் மூலம் கண்டு வருகின்றனர்.
ஒளிபரப்புக்கு தடை
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தொலைக்காட்சியில் கூட ஐபிஎல் போட்டிகளை காண்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது ஆட்சியை பிடித்துள்ள தாலிபான் அமைப்பு, அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
என்ன காரணம்
ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தில் பெண் பார்வையாளர்கள் இருப்பதாகவும், அதே போல திறந்த மைதானத்தில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடனமாடுவதாகவும் கூறி தாலிபான் அமைப்பு தடைவிதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அயல்நாடுகள் ஆத்திரம்
தாலிபான் அமைப்பின் விதிமுறைப்படி ஆஃப்கானிஸ்தானில் விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கமாட்டார்கள். சமீபத்தில் ஆடவர் கிரிக்கெட்டிற்கு அனுமதி அளித்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியமளித்தது. எனினும் மகளிர் கிரிக்கெட்டிற்கு தடைவிதித்து விட்டனர். மகளிர் கிரிக்கெட் விளையாடக்கூடாது என தாலிபான்கள் அமைப்பு கூறிவிட்டதால் அயல்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் கோபத்தில் உள்ளனர். ஆஃப்கானிஸ்தானை ஐசிசி-ன் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்து வருகின்றன. சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானுடன் கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதனை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.