குழப்பம்
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால் பிசிசிஐக்கு சுமார் ரூ.2200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளில் ஏதோ ஒன்றில் நடைபெறும் என தகவல் வெளியானது.
விருப்பம்
அதன்படி எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரின் போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் எம்சிசி, சர்ரே, வார்விக்ஷயர் மற்றும் லான்ஷாஷயர் ஆகிய 4 கவுண்டிகள் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக பிசிசிஐக்கும் அந்த கவுண்டி அணிகள் சார்பாக எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டவிரோதம்
இந்நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஹாம்ப்சைர் கவுண்டி தலைவர், ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. தற்போது உள்ள விதிமுறைகளின் படி இங்கு ஐபிஎல்-ஐ நடத்துவது சட்ட விரோதமானது. அது குறித்து எந்த பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
கடந்த மே 6ம் தேதி கூட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எனினும் அதில் ஐபிஎல் குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறப்படுகிறது. ஆனால் எப்படியும் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முன்னுரிமை அளிக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்தாண்டு மிகச்சிறப்பாக அங்கு நடைபெற்று முடிந்தது.