தம்பி சூசைட் பண்ணது கூட தெரியாது.. நேற்று ஐபிஎல் உலகை திரும்பி பார்க்க வைத்த வீரர்.. உருக வைத்த கதை
மும்பை: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்த சேட்டன் சக்காரியாவிற்கு பின் மிகவும் உருக்கமான கதை ஒன்று இருக்கிறது.
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டி கடைசி பால் வரை விறுவிறுப்பாக சென்றது.
சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரியான் பராக், கே. எல் ராகுல் என்று நேற்று கிட்டத்தட்ட முக்கியமான இளம் இந்திய வீரர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் இதில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து, தனித்து தெரிந்தது சேட்டன் சக்காரியாதான்.

யார்
சௌராஷ்டிரா அணிக்காக முதல் தர போட்டிகளில் ஆடும் இவர், கடந்த ஐபிஎல் ஏலத்தில்தான் 1.20 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். இந்த போட்டிதான் சேட்டன் சக்காரியாயின் அறிமுக போட்டியாகும். நேற்று ராஜஸ்தான் அணியில் வீரர்கள் எல்லோரும் ரன்களை வாரி வழங்க சேட்டன் சக்காரியா மட்டுமே ரன் செல்வதை கட்டுப்படுத்தினர்.

சிறப்பு
எல்லா வீரர்களும் 10-11 ரன்களை கொடுக்க சேட்டன் சக்காரியா மட்டுமே சிறப்பாக பவுலிங் செய்தார். தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் விக்கெட்டை எடுத்து பெரிய பிரேக் கொடுத்தார். சேட்டன் சக்காரியா வீசிய மூன்றாவது ஓவரை தவிர எல்லா ஓவர்களும் சிறப்பாக இருந்தது. அதிலும் கடைசி ஓவரில் சேட்டன் சக்காரியா வீசிய ஸ்பெல் ஐபிஎல் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

மாஸ் பவுலிங்
நேற்று இவர் கே. எல் ராகுல், கெயில், தீபக் ஹூடா, ஷாருக்கான் என்று ஹிட்டர்களுக்கு பவுலிங் செய்தும் ரன் கொடுக்கவில்லை. அதிலும் கடைசி ஓவரில் பூரான், ஜெய் ரிச்சர்சன் விக்கெட்டுகளை நேற்று எடுத்தார். 4 ஓவரில் வெறும் 31 ரன்கள் மட்டுமே கொடுத்தார் இந்த 22 வயது இளம் வீரர். ஸ்லோ பால், யார்க்கர், கையை சுற்றி பின்பக்கமாக வீசும் ஸ்லோ யார்க்கர் என்று நேற்று நிறைய வெரைட்டி இவர் காட்டினார்.

யார்
மிகவும் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர் சேட்டன் சக்காரியா. இவர் சையது முஷ்டாக் கோப்பை ஆடும் போதுதான் இவரின் அப்பாவிற்கு மூன்றாவது முறையாக விபத்து ஏற்பட்டது. லாரி டிரைவரான இவர் வீட்டிலேயே முடங்கியதால், குடும்பம் வறுமையின் உச்சத்திற்கு சென்றது. இன்னொரு பக்கம் இவரின் தம்பியும் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை
சேட்டன் சக்காரியா சையது முஷ்டாக் கோப்பை ஆடும் போதுதான் இவரின் தம்பி தற்கொலை செய்து கொண்டார். அந்த விஷயத்தை கூட 10 நாட்கள் சேட்டன் சக்காரியாவிடம் அவரின் குடும்பத்தினர் சொல்லவில்லை. தம்பி இறந்தது கூட தெரியாமல் சேட்டன் சக்காரியா அந்த தொடரில் ஆடினார்.

உருக்கம்
இந்த தொடரில் ஆடி முடித்து, சவுராஷ்டிரா அணியின் அதிக பட்ச விக்கெட் டேக்கராக சேட்டன் சக்காரியா உருவெடுத்தார். சேட்டன் சக்காரியா இந்த தொடரில் ஆடியதன் மூலம் மட்டுமே ஐபிஎல் தொடரில் கவனிக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டார். 1.20 கோடி ரூபாய்க்கு இவர் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் ஒரு மகனை இழந்த குடும்பம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications