முதல் குவாலிபயர்
இதில் முதலாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதின. அதில் தல தோனியின் அட்டகாசமான ஃபினிசரால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினெட்டர் போட்டியில் பெங்களூரு அணியை கேகேஆர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டெல்லி vs கேகேஆர்
இதையடுத்து இன்று 2ஆவது குவாலிபயர் போட்டி ஷார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். கேகேஆர் அணியில் எவ்வித மாற்றும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் ஒரே ஒரு மாற்றமாக டாம் கரனுக்கு பதிலாக ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஷார்ஜியா மைதானம் பேட்டிங் செய்யக் கடினமான ஒன்று என்பதால் டெல்லி அணி நிதனமாகத் தனது ஆட்டத்தைத் தொடங்கியது. 5ஆவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் பிரித்திவ் ஷா (18 ரன்கள்) போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து வந்த ஸ்டோனிஸ் - தவான் இணை நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டெல்லி அணி திணறல்
இந்தச் சூழலில் 12ஆவது ஓவரில் ஷிவம் மாவி பந்து வீச்சில் ஸ்டோனிஸ் 18 ரன்களில் போல்ட் ஆனார். அவர் வெளியேறிய சற்று நேரத்திலேயே, நிதனமாக விளையாடி வந்த ஷிகர் தவான் 36 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரிலேயே கேப்டன் ரிஷப் பந்த் 6 ரன்களில் வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 135 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
சிறப்பான தொடக்கம்
மிக எளிமையான இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணிக்கு மிகவும் வலுவான ஒரு தொடக்கம் கிடைத்தது. பவர்ப்ளேவில் அதிரடியாக விளையாடி கேகேஆர் 51 ரன்களை குவித்தனர். அதன் பிறகு நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியதால் முதல் 12 ஓவர்களில் எந்தவொரு விக்கெட்டையும் கேகேஆர் இழக்கவில்லை. 13ஆவது ஓவரில் ரபாடா இந்த ஜோடியை பிரித்தார். 55 ரன்கள் எடுத்துச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிதஷ் ரானா 13 ரன்களில் நடையை கட்டினார். பொறுப்பாக ஆடி வந்த சுப்மான் கில், 46 ரன்களில் அவேஷ் கான் பந்துவீச்சில் அவுட் ஆகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
கடைசியில் திக் திக்
இதன் பிறகு கேகேஆர் அணிக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரிசையாக விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. 18ஆவது ஓவரை வீசிய ரபாடா ஒரு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்தினார். 19ஆவது ஓவரை வீசிய நார்ட்ஜே 3 ரன்களை மட்டும் கொடுத்து மோர்கனை போல்ட் செய்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அஸ்வின் வீசினார்.
கேகேஆர் வெற்றி
முதல் பந்தில் கேகேஆர் சிங்கள் எடுத்த நிலையில், 3 மற்றும் 4ஆவது பந்தில் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினார் அஸ்வின். வெறும் 11 பந்துகளில் தினேஷ் கார்திக், கேப்டன் இயன் மோர்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகியோரை இழந்தது கேகேஆர். இந்த டாப் பேட்ஸ்மேன்கள் அனைவரும் டக்அவுட் ஆகியது கேகேஆர் மீது அழுத்தத்தை அதிகரித்தது. கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், 5ஆவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு கேகேஆர் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ராகுல் திரிபாதி. இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் வரும் அக்.15ஆம் தேதி சென்னை அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா