தொடர் வெற்றி
கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நம்பிக்கையுடன் இன்று டெல்லி அணிக்கு எதிராக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கே.எல்.ராகுல் குடலில் ஏற்படும் அப்பெண்டிசைட்டிஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு தீடீரென வயிற்று வலியில் துடித்ததாகவும், அவருக்கு செய்த சோதனையில் அப்பெண்டிசைட்டிஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சந்தேகம்
அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் இந்த தொடரில் தொடர்ந்து ஆடுவாரா என்பது சந்தேகம் தான். எனவே இந்த ஐபிஎல் தொடரில் ராகுல் இனி விளையாடமாட்டார் என பேச்சுக்கள் எழத்தொடங்கிவிட்டது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பஞ்சாப்பிற்கு பின்னடைவு
இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராகுலுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி போன்ற பலமான அணியுடன் மோதும் போட்டியில் கே.எல்.ராகுல் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 331 ரன்கள் குவித்துள்ளார். ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் கூட 57 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.