
நீடிக்கும் சிக்கல்
ஐபிஎல் தொடர் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அது முடிவடைந்த அடுத்த இரண்டு நாட்களில் , அதாவது அக்டோபர் 17ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அதற்காக திட்டமிட்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களுக்கு அனுமதி கொடுத்துள்ள போது, வீரர்கள் இன்னும் குழப்பத்திலேயே தான் உள்ளனர்.

குழப்பத்தில் ஆர்சிபி
அந்தவகையில் சமீபத்தில் ஆர்சிபி அணியில் இருந்தும் ராஜஸ்தான் அணியில் இருந்தும் சில முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு முழு அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கும் அதே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் புது வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் பல்வேறு வீரர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அந்த அணி இறுதியாக வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தியை ஒப்பந்தம் செய்துள்ளது. நியூசிலாந்து வீரரான இவர் டி20 கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் உள்ள வீரர் ஆவார். ஐபிஎல் தொடரிலேயே பல்வேறு சீசன்களிலும் பங்கேற்றுள்ளார்.

அனுபவ வீரர்
கடந்தாண்டு வரை ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த டிம் சவுத்தி, 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொல்கத்தா அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சவுத்தியின் வருகை அந்த அணிக்கு எப்படி உதவப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











