முதல் போட்டி
கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
பேட்டிங்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - கிறிஸ் லின் பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. ரன் எடுக்க முயன்ற போது ரோகித் சர்மா சஹாலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனையடுத்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பரிகொடுத்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கிறிஸ் லின் 35 பந்துகளில் 49 ரன்களை எடுத்து வெளியேறினார்.
திடீர் சொதப்பல்
மிடில் ஆர்டரில் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற இஷான் கிஷான் 28 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன்பின்னர் வந்த ஹர்த்திக் பாண்டியா 13, பொல்லார்ட் 7, என பெவிலியன் திரும்பினர். இதனால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் சொதப்பியது.
பயம் காட்டிய ஜேமிசன்
இதனிடையே போட்டியின் போது சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. ஆட்டத்தின் 18வது ஓவரில் க்ருணால் பாண்டியா பேட்டிங் செய்து வந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் கெயில் ஜேமிசன் போட்ட பந்து க்ருணால் பாண்டியாவின் பேட்டை இரண்டாக உடைத்தது. இதனால் ஒரு நிமிடம் ஷாக்கான க்ருணால் வெறும் கையில் சிக்ஸர் அடிப்பது போல கிண்டல் செய்தார்.
பேசுப்பொருள்
இது குறித்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். மறுபுறம் ஆர்சிபி அணியால் 15 கோடிக்கு எடுக்கப்பட்ட கெயில் ஜேமிசன் முதல் போட்டியிலேயே பேட்ஸ்மேனுக்கு பயம் காட்டிவிட்டார் என கூறப்பட்டு வருகிறது.