சீனியர் வீரர் இருக்கையில் இளம் வீரருக்கு வாய்ப்பு.. டெல்லி அணியின் முடிவு.. யார் இந்த லலித் யாதவ்!
மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணி சீனியர் வீரர் இருக்கும் போது இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக வீரர்கள் தங்களது முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடி வியக்கவைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று டெல்லி அணியில் அறிமுகம் ஆகியிருக்கும் இளம் வீரர் லலித் யாதவ் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இளம் வீரர்
மும்பையில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்காக அந்த அணியில் அறிமுக வீரர் லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கேப்பை வழங்கி வரவேற்றார்.

யார் இந்த லலித் யாதவ்
24 வயதாகும் லலித் யாதவ் வலது கை ஆல் ரவுண்டர் ஆவார். இவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கடந்தாண்டு அடிப்படை தொகை ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். எனினும் கடந்தாண்டு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தனது அறிமுக போட்டியில் களமிறங்குகிறார்.

புள்ளிவிவரம்
சமீபத்தில் நடைபெற்ற சையது முஷட்க் கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதே போல இதுவரை 35 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள லலித் யாதவ் பவுலிங்கில் 27 விக்கெட்களை எடுத்துள்ளார். அதே போல பேட்டிங்கில் 560 ரன்களை எடுத்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர்
டெல்லி அணியில் மூத்த வீரர் அமித் மிஸ்ரா இருந்த போதும் ஏன் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என பேசப்பட்டு வருகிறது. மும்பை பிட்ச்சானது பேட்டிங்கிற்கு உதவக்கூடிய ஒன்றாகும். அதே போல சுழற்பந்துவீச்சுக்கும் பெரியளவில் உதவாது. எனவே லலித் யாதவ் ஆல்ரவுண்டர் என்பதால் பேட்டிங்கிற்கு உதவுவார். ஆனால் அமித் மிஸ்ரா பேட்டிங்கில் பெரியளவில் உதவமாட்டார் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications