
அமீரகத்தில் ஐபிஎல்
ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 18 அல்லது 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது. மீதமுள்ள 31 போட்டிகளில் 10 போட்டிகள் double headers-ஆக, (ஒரே நாளில் இரண்டு போட்டிகள்) நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளை 21 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குவாரண்டைன் திட்டம்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முடித்துவிட்டு இந்திய வீரர்கள் நேராக அமீரகம் சென்றுவிடுவார்கள் என்றும் மற்ற வீரர்கள் முன்கூட்டியே அமீரகம் சென்று குவாரண்டைனில் ஒரு வார காலம் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிசிசிஐ கூட்டம்
இந்நிலையில் பிசிசிஐ சார்பில் SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டம்' இன்று கூடுகிறது. இதில், ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்தும் தேதிகள் குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல டி20 உலகக்கோப்பை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா அதிகமாக இருப்பதால் டி20 தொடரை எங்கு நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க ஐசிசி சார்பில் வரும் ஜூன் 1ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாகவே இன்று நடைபெறும் கூட்டத்தில் பிசிசிஐ தனது நிலைப்பாட்டை உறுதி செய்யவுள்ளது.

உலகக்கோப்பை
இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலையை பார்த்தால் டி20 உலகக்கோப்பையும் அமீரகத்தில் தான் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை அங்கு நடைபெற்றால் அந்த மைதானங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடர் இந்திய வீரர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும். இவை அனைத்தும் ஜூன் 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications