புதிய மைல்கல்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மிகவும் அனுபவம் நிறைந்த வீரரான தோனி இன்று சிஎஸ்கேவுக்காக 200வது போட்டியில் களமிறங்கியுள்ளார். உள்நாட்டு தொடர்களில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சிறந்த கேப்டன்
எம்.எஸ்.தோனி ஐபிஎல்-ல் இதுவரை 235 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 2 ஆண்டுகள்( 2016, 2017) சிஎஸ்கே தடை செய்யப்பட்டிருந்த போது புனே அணிக்காக 30 ஆட்டங்களில் விளையாடியதும் அடங்கும். சென்னை அணிக்காக ஆடியுள்ள 200 போட்டிகளில் 176 போட்டிகள் ஐபிஎல்-லிலும், 24 போட்டிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் ஆகும். சென்னை அணியில் தோனிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக 190 போட்டிகளில் களம் கண்டுள்ளார். 3வது இடத்தில் ஜடேஜா 132 போட்டிகளில் களம் கண்டுள்ளார்.
சிஎஸ்கே சாம்பியன்
தோனி தலைமையில் 12வது சீசனில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018ம் ஆண்டு என 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதே போல இதுவரை ஒரே ஒரு சீசனில் மட்டுமே ப்ளே ஆஃப்-க்கு செல்லாமல் வெளியேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக அவர் திகழ்ந்து வருகிறார்.
அனுபவ வீரர்
ஐபிஎல்-ல் இதுவரை 183 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள தோனி 4,632 ரன்களை விளாசியுள்ளார். இதில் 23 அரை சதங்களும் அடங்கும். இதுவரை 216 சிக்ஸர்கள், 313 பவுண்டரிகள் அடித்துள்ள அவர் சராசரியாக 136.68 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார். குறிப்பாக நம்பர் 1 மேட்ச் ஃபினிஷர் என புகழப்படும் வீரராக தோனி திகழ்கிறார்.
கடும் விமர்சனங்கள்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மோசமானதாக அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. கேப்டனாக தோனியும் பெரிய அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த சீசனில் 200 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் தோனிக்கு வயதாகிவிட்டது, ஓய்வு பெற வேண்டும் என பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது குவிந்தது. எனவே இந்த முறை சென்னை அணிக்காக கோப்பை வென்று கொடுத்தே தீர வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியுள்ளார்.