அதிரடி ஓப்பனிங்
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் சிறப்பாக விளையாடுவதற்காக விராட் கோலியும் தனது ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் இவர்களின் பார்ட்னர்ஷிப்பை யாராலும் இறுதி வரை பிரிக்க முடியவில்லை. 52 பந்துகளை சந்தித்த படிக்கல் 101* எடுத்தார். இதில் 6 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். இதே போல கேப்டன் கோலி 47 பந்துகளிஅல் 72 ரன்கள் எடுத்தார்.
முதல் சதம்
தனது ஆட்டம் குறித்து பேசிய படிக்கல், சதத்தை நெருங்கும் போது எனக்கு ஒரு பதற்றமும் இல்லை. நான் அப்போது கூட விராட் கோலியிடம் நீங்கள் ஆட்டத்தை வேகமாக முடித்துவிடுங்கள் என்றுதான் கூறினேன். ஏனென்றால் அணி வெற்றி பெற்றுவிட்டால் போதும், நான் சதமடிக்கவில்லை என்றாலும் வருத்தம் இல்லை. ஒரு சில நேரங்களில் நான் அதிரடி காட்டினேன், ஒரு சில நேரத்தில் கோலிக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே நாங்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து வெல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்.
சிறப்பான தருணம்
இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது, முதல் போட்டியில் ஆட முடியாததை நினைத்து மிக வருத்தப்பட்டேன். அப்போது நான் எனக்கான நேரம் வரும் என சமாதானம் செய்துகொண்டேன். அந்த தருணம் தான் இது. மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு நன்கு உதவியது. நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது போட்டியை வெல்வது சுலபமாக இருந்தது.
காரணம் என்ன?
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான தேவ்தத் படிக்கல் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். ஆனால் இந்த ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்னர் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன் பின்னர் நடந்த 2 போட்டிகளிலும், 11, 25 என்ற குறைவான ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.