வெற்றி
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ராஜஸ்தான் அணி நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் எந்த வித சிரமமும் இன்றி சுலபமான வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பவுலர்கள் கொல்கத்தா அணியை 133 ரன்களுக்கு சுருட்டியது. இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி, கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்ச்சை கருத்து
இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பேசியிருந்த முன்னாள் வீரர் பிரக்யன் ஓஜா, ராஜஸ்தான் அணி வீரர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது போலவும், களத்தில் 11 வீரர்கள் தனித்தனியாக விளையாடி வருகிறார்கள் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
சேவாக்
இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் மகிழ்ச்சி இல்லை. அமைதியாக இருந்த ஒரு வீரருக்கு திடீரென கேப்டன் பதவி கொடுத்துவிட்டனர். அவர் அந்த பதவிக்கு பொருந்த இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.
கேப்டன்சி
கேப்டனாக இருப்பவர் அணி வீரர்களின் அனைத்து செயல்பாடுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணியில் ஒரு வீரரின் பந்துவீச்சில் அதிக ரன்கள் சென்றால் கூட சஞ்சு சாம் அந்த பவுலரிடம் ஏதும் பேசுவது இல்லை. அணி வீரர்களை கேப்டன் தான் பிரஷர் இன்றி அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். ரிஷப் பண்ட் அந்த விஷயத்தை செய்கிறார். ஆனால் சஞ்சு சாம்சன் அதனை செய்யவில்லை.
அணியாக செயல்படவில்லை
ஒரு கேப்டன்தான், பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களிடம் நம்பிக்கையை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் அணியில் அயல்நாட்டு வீரர்கள் கூட அடிக்கடி டக் அவுட் ஆவதை பார்க்க முடிகிறது. அந்த அணி வீரர்களுக்குள் சரியான பேச்சுவார்த்தை தொடர்பு இல்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது, எனவே அதனை பார்க்கும் போது ஒர் அணியை போன்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.