வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது சென்னை அணிக்காக கேப்டன் தோனி ஆடும் 200வது போட்டியாகும். தோனி, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதனால் உள்நாட்டு தொடர்களில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கேப்டன்
எம்.எஸ்.தோனி ஐபிஎல்-ல் இதுவரை 235 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 2 ஆண்டுகள்( 2016, 2017) சிஎஸ்கே தடை செய்யப்பட்டிருந்த போது புனே அணிக்காக 30 ஆட்டங்களில் விளையாடியதும் அடங்கும். சென்னை அணிக்காக ஆடியுள்ள 200 போட்டிகளில் 176 போட்டிகள் ஐபிஎல்-லிலும், 24 போட்டிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் ஆகும்.
ஃப்ளெம்மிங்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், ஒரு அணிக்காக 200 போட்டிகளில் ஆடியதற்காக அவர் பாராட்டுக்குறியவர். சென்னை அணிக்கு தோனிதான் இதய துடிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. அவரின் அறிவுரை, அனுபவன், கேப்டன்சி இவை குறித்து பேச நமக்கு வார்த்தைகளே கிடைக்காது. இவ்வளவு நீண்ட காலமாக ஒரு அணியில் இருப்பது, சென்னை அணி மீதும் ஆட்டம் மீதும் வைத்துள்ள நேசத்தின் சான்றாகும். அவரால் சென்னை அணியும், அணியால் தோனியும் வளர்ந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
மனம் திறந்த தோனி
இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் பங்கேற்றது என்பது எனது நீண்ட பயணம் ஆகும். இந்த நீண்ட கால பயணத்தால் எனக்கு சற்று வயதாகிவிட்டது போன்று உணர்கிறேன். ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா, துபாய், சென்னை சிஎஸ்கேவுடன் எனது பயணம் தொடங்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை, நாங்கள் மும்பையில் விளையாடுவோம் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.