
தொற்று உறுதி
கொல்கத்தா அணி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடம் மோதவிருந்தது. இதற்காக வீரர்கள் தயாராகி கொண்டிருந்த நேரத்தில் சிலருக்கு உடல்நிலை பாதித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து செய்த பரிசோதனையில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. மேலும் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட சக வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் இன்றை ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எங்கிருந்து வந்தது
மிகவும் பாதுகாப்பான பயோ பபுளை மீறி எப்படி கொரோனா உள்ளே நுழைந்திருக்க முடியும் என்ற கேள்விகளுக்கு தற்போது விடைகிடைத்துள்ளது. தோள் பட்டை நோயால் அவதிப்பட்டு வந்துள்ள கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் அணியின் பயோ பபுளை மீறி வெளியே சென்று மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து வந்துள்ளார். பின்னர் எந்த வித குவாரண்டைனும் இன்றி மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். அவர் வெளியில் சென்ற போதுதான் கொரோனா நோய் தொற்றிக்கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

டெல்லி அணியிலும் கொரோனா?
வருண் சக்கரவர்த்தி ஸ்கேன் எடுக்க சென்று வந்த பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இதனால் டெல்லி வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற அபாயம் எழுந்துள்ளது. இதனையடுத்து டெல்லி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

சிக்கல்
ஒரு வேளை டெல்லி அணியில் யாருக்கேனும் தொற்று உறுதியாகியிருந்தால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குள்ளும் நோய் தொற்று சென்றிருக்கலாம். ஏனென்றால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு டெல்லி அணி நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதனால் மொத்த ஐபிஎல் தொடரும் தடைபடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. வருண் சக்ரவர்த்தி நெறிமுறைகளை மீறி வெளியே சென்று வந்ததால் ஐபிஎல் தொடர் நடைபெறுவதிலேயே தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











