
மேலும் இருவருக்கு கொரோனா
கொல்கத்தா அணியை சேர்ந்த மேலும் 2 வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில வீரர்களுக்கு கொரோனா இருக்கும் என்ற அச்சம் உள்ளதால் இன்று நடைபெறவிருந்த கொல்கத்தா - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து உறுதி
முன்னதாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அக்ஷர் பட்டேல், கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா, ஆர்சிபி வீரர் தேவ்தத் பட்டிக்கல், டேனியல் சாம்ஸ் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் குணமடைந்தனர்.

வீரர்களுக்கு மட்டுமல்ல
வீரர்கள் மட்டுமின்றி ஊழியர்கள் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரிந்த 8க்கும் மேற்பட்டோருக்கும் ஐபிஎல் அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே போல சென்னை அணியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

விலகல்
இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் சாம்பா, ஆண்ட்ரே டை, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினர். இவர்களின் விலகலுக்கு இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோரும் விலகவிருப்பதாக தகவல் வெளியானது.

கள நடுவர்கள்
இதே போல கள அம்பயர்களான நிதின் மேனன் மற்றும் பால் ரீபில் ஆகியோர் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இதில் நிதின் மேனன், தனது தாய் மற்றும் மனைவிக்கு தொற்று உறுதியானதால் வெளியேறினார். பால் ரீபில், ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுவிடும் என்பதால் விலகினார்.

நிறுத்தப்படுமா ஐபிஎல்
இதனால் ஐபிஎல் தொடரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து நடைபெற்றால் மேலும் பல வீரர்களுக்கு தொற்று உறுதியாகும் எனவும் கண்டன குரல்கள் வலுக்க தொடங்கியுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஐபிஎல்-ஐ நிறுத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல்-ல் இருந்து விலகும் வீரர்கள் தாராளமாக விலகிக்கொள்ளுங்கள், ஆனால் ஐபிஎல் நடந்தே தீரும் என பிசிசிஐ உறுதியாகவுள்ளது. எனினும் தற்போதைய நிலைமையை புரிந்துக்கொண்டு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











