
கே.எல்.ராகுல் சதம்
தொடக்க வீரரும், கேப்டனுமான கே.எல்.ராகுல் இன்று தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அதற்கேற்றார் போல ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடினார். 60 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் குயிண்டன் டிக்காக் 24 ரன்களுக்கு வெளியேறினார்.

கடினமான இலக்கு
இதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்டி சென்றனர். மணிஷ் பாண்டே 29 பந்துகளில் 38 ரன்களும், தீபக் ஹூடா 8 பந்துகளில் 15 ரன்களையும் விளாசினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து 199 ரன்களை குவித்தது. மும்பை அணி தரப்பில் உனத்கட் 2 விக்கெட்களும், முருகன் அஸ்வின், ஃபெபியன் ஆலன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். டைமல் மில்ஸ் வெறும் 3 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார்.

ஏமாற்றிய ஓப்பனிங்
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 6 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இஷான் கிஷான் 13 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றினர். இதன் பின்னர் வந்த டெவால்ட் பிரேவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

மிடில் ஆர்டர் மிரட்டல்
பிரேவிஸ் 13 பந்துகளில் 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 37 ரன்களையும் விளாசினர். இவர்களுக்கு உறுதுணையாக திலக் வர்மா 26 ரன்களை சேர்த்தார். இதனால் 57 - 3 என்று இருந்த ஸ்கோர் 121 - 4 என மாறியது. ஆனால் இதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

தனி நபர் போராட்டம்
மறுமுணையில் ஒற்றையாளாக போராடிய கெயீரன் பொல்லார்ட் 14 பந்துகளில் 25 ரன்களை மட்டும் சேர்த்தும் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து மும்பை அணியால் 181 ரன்களை மட்டுமே எடுத்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியையே தழுவியது. நடப்பு தொடரில் மும்பை அணி பெறும் 6வது தோல்வி இதுவாகும்.


Click it and Unblock the Notifications