சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் 13 ஆண்டுகளாக மும்பை அணியை வீழ்த்த முடியாமல் சென்னை அணி திணறி வருகிறது. இதனை நடப்பாண்டில் சிஎஸ்கே அணி மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி விளையாட உள்ளது. ஐபிஎல் தொடரின் "எல்-கிளாசிக்கோ" என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரஹானேவின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி எளிதாக வெற்றிபெற்றது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பதிலடி கொடுக்க மும்பை அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியின் பிளே ஆஃப் கனவு பிரகாசமாகும்.
இதனால் ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியாக சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியின் வெற்றி சதவிகிதம் சென்னை அணி ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2010ஆம் ஆண்டுக்கு பின் சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வீழ்த்தியதே இல்லை.

2018ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் திரும்பி வந்ததில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் கூட மும்பை அணியை சென்னை வென்றதே இல்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சொந்த மண்ணில் மும்பை அணியை வீழ்த்த முடியாமல் சென்னை அணி திணறி வருகிறது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் இன்றைய போட்டியிலும் தங்கள் அணியின் ஆதிக்கம் தொடரும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.