மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர், ஒரே ஓவரில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்த சம்பவம் ஆட்டத்தையே மாற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் 55 ரன்கள் குவித்து அசத்தினார்.

பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது முதல் 14 ஓவர்களில் 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த சூழலில் ரன்களை சேர்க்கவே பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வந்த நிலையில், அடுத்த 6 ஓவர்களில் எழுச்சி பெற்று 109 ரன்களை குவித்துள்ளனர். இதற்கு 16வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
முதல் இரு ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, சிறப்பாக ஆடி வந்த பிரப்சிம்ரன் சிங்கை அபாரமான யார்க்கர் மூலம் வீழ்த்தினார். இதனால் மீண்டும் டெத் ஓவரில் ஒரு ஓவரை வீச அர்ஜுன் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தை சாம் கரண் சிக்சருக்கு அனுப்ப, 2வது பந்தை பவுண்டரியாக மாற்றினார். பின்னர் 3வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, 4வது பந்தில் ஹர்ப்ரீத் பாட்டியா பவுண்டரி விளாசி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து 5வது பந்தில் ஹர்ப்ரீத் பாட்டியா சிக்சர் விளாச, அடுத்த பந்தை அர்ஜுன் டெண்டுல்கர் நோ-பால் வீசினார். அந்த பந்தும் பவுண்டரியானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் விளாசப்பட்டது. அங்கிருந்து தொடங்கிய பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் அதிரடி எங்கேயும் நிற்கவே இல்லை. இதனால் பஞ்சாப் அணி 214 ரன்கள் குவிக்க அர்ஜுன் டெண்டுல்கரின் ஓவரே காரணமாக அமைந்தது.