சென்னை: மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய யுக்தி அந்த அணிக்கு மோசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக ஆடி வந்த கேமரூன் க்ரீனை தொடக்க வீரராக அனுப்பியதோடு, அவரும் 3வது வீரராக களமிறங்கி ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 49வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் மும்பை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து மும்பை அணி சார்பாக இஷான் கிஷன் - கேமரூன் க்ரீன் இணை தொடக்கம் கொடுத்தது. சென்னை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வழக்கமாக களமிறங்கும் ரோகித் சர்மா, இன்று மிடில் ஆர்டரில் வந்தார். தொடக்க வீரராக ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லாததால், அவர் தனது பேட்டிங் இடத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் கேமரூன் க்ரீன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து 3வது வீரராக ரோகித் சர்மா களமிறங்கினார். இதன்பின்னர் மீண்டும் தீபக் சஹர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தில் இஷான் கிஷன் 7 ரன்களில் தீக்சனாவின் அபாரமாக கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் ரோகித் சர்மாவை வீழ்த்த தோனி புதிய யுக்தியை பயன்படுத்தினார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தீபக் சஹரிடம் வேகம் குறைவாக இருப்பதால், அவரது ஸ்விங்கை எதிர்கொள்ள ரோகித் சர்மா டவுன் தி டிராக் வந்து ஆடினார்.

இதனை கணித்து தோனி தீபக் சஹரிடம் வேகத்தை குறைக்க கூறி, ஸ்டம்புக்கு அருகில் வந்து விக்கெட் கீப்பிங் செய்தார். அதேபோல் பாய்ண்ட் திசையிலும் ஃபீல்டர்களின் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார். இதனால் ரோகித் சர்மா வித்தியாசமாக ஸ்கூப் ஷாட் ஆட முயற்சி செய்து, ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சென்னை அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக மாற்றியது அந்த அணிக்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.