சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் "குட்டி மலிங்கா" பதிரானா வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. சென்னை அணி சார்பாக இளம் வீரர் பதிரானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

4 ஓவர்களை வீசிய பதிரானா வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 18 மட்டும் 20 ஆகிய ஓவர்களை வீசிய பதிரானா வெறும் 7 ரன்களை விட்டுக் கொடுத்து மும்பை அணி ரன் குவிப்பை நிறுத்தி அசத்தினார். கடந்த சில போட்டிகளாக சிறப்பாக பந்துவீசியும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால், பதிரானாவை பலரும் கிண்டல் செய்து வந்தனர்.
இருப்பினும் சென்னை அணியின் கேப்டன் தோனி, பதிரானாவின் சிறப்பான பந்துவீச்சு ஸ்கோர்கார்டில் வெளிவரவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தோனியின் நம்பிக்கையை பதிரானா காப்பாற்றியுள்ளார். அதேபோல் மும்பை அணிக்காக மலிங்கா ஏராளமான ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
ஆனால் குட்டி மலிங்கா என்று கொண்டாடப்படும் பதிரானாவை சென்னை அணி சிறுவயதிலேயே கண்டறிந்து ஒப்பந்தம் செய்தது. அப்போது யாரோ ஸ்கூல் படிக்கும் பையனை கொண்டு வந்து குட்டி மலிங்கா என்று ஒப்பிட்டதை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் மலிங்கா ஆடிய அணிக்கு எதிரான "குட்டி மலிங்கா" பதிரானா சம்பவம் செய்துள்ளது சென்னை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.