மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 215 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் சாம் கரண் 55 ரன்கள் குவித்து அசத்தினார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி சார்பாக மெரிடித் நீக்கப்பட்டு ஆர்ச்சர் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - ஷார்ட் கூட்டணி களமிறங்கியது. ஷார்ட் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் பிரப்சிம்ரன் சிங் - அத்ர்வா இணை அதிரடியாக ஆடியது. இதன் காரணமாக பஞ்சாப் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 58 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து பிரப்சிம்ரன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பியூஷ் சாவ்லா வீசிய 10வது ஓவரில் லிவிங்ஸ்டன் 10 ரன்களிலும், அதர்வா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து அடுத்த 4 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 22 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. பின்னர் கேப்டன் சாம் கரண் மற்றும் ஹர்ப்ரீத் பாட்டியா இருவரும் பவுண்டரிகளை விளாச தொடங்கினர். அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 16வது ஓவரில் மட்டும் இந்த இணை 31 ரன்களை விளாசியது. பின்னர் ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஹர்ப்ரீத் பாட்டியா சிக்சர் விளாச, இன்னொரு பக்கம் கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் சாம் கரண் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி அசத்தினார்.
பின்னர் ஹர்ப்ரீத் பாட்டியா 41 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா தன் பங்கிற்கு கேமரூன் க்ரீன் பந்தில் 2 சிக்சர்களை விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை குவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் பவுண்டரி விளாசி சாம் கரண் அரைசதம் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 10 ரன்களை பஞ்சாப் அணி சேர்க்க, சாம் கரண் 55 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் கடைசி ஓவரை வீச பெஹ்ரண்டார்ஃப் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜித்தேஷ் சர்மா சிக்சர் அடிக்க, மீண்டும் 3வது பந்தை சிக்சர் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த பரார் ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.