அகமதாபாத்: குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்பாக குஜராத்தி பாடகி கிஞ்சல் டேவின் கலை நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபையர் இரண்டாவது போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக கலைநிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆட்டம் நடக்கவுள்ளதால், குஜராத்தி பாடகியான கிஞ்சல் டேவ் பாடல் பாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐபிஎல் தொடரின் முதல் மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். நடப்பு சீசனில் கூட தொடக்க நிகழ்ச்சியில் தமன்னா, ராஷ்மிகா மந்தனா, அர்ஜித் சிங் உள்ளிடோர் நடனமாடியும், பாடல் பாடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் நடப்பு சீசனில் குவாலிஃபையர் 2வது போட்டியிலேயே கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரையிறுதி போட்டியாக கருதப்படும் குவாலிஃபையர் 2வது போட்டிக்கே கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இறுதிப்போட்டிக்கு பிசிசிஐ திட்டம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே பேச தொடங்கியுள்ளனர். இதனால் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்புக்கு நிகராக கலைநிகழ்ச்சிகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.