மும்பை : ஐபிஎல் 16வது சீசனில் இன்று இரண்டு வெற்றிகரமான அணிகள் என பெயர்களைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று பல பரிட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் ரன் குவிப்புக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் மிக முக்கிய பங்கு ஆற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் எந்த இலக்கை துரத்த போகிறோம் என்பதை தெரிந்தால் அது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் தாண்டி இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் டாஸ் மிகவும் ஒரு முக்கிய பங்காற்றி இருக்கிறது.

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். சென்னையும் மும்பையும் கடைசியாக மோதிய ஏழு ஆட்டங்களில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது எந்த அணி டாசை வெல்கிறார்களோ அவர்கள் தான் ஆட்டத்தை வென்றிருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிய கடைசி இறுதிப் போட்டியில் மும்பை அணி டாசை வென்று ஆட்டத்தை கைப்பற்றியது.
இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாசை வென்று ஆட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. அதே சீசனில் மும்பை டாஸ் கைப்பற்றி ஆட்டத்தை ஜெயித்து இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு முதல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி டாசை வென்று ஆட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. அதே ஆண்டில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே டாஸ்சை கைப்பற்றி ஆட்டத்தையும் ஜெயித்திருக்கிறது.
இதேபோன்று 2022 ஆம் ஆண்டில் சி எஸ் கே டாசை கைப்பற்றி முதல் ஆட்டத்தை வென்றிருக்கிறது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை டாஸ் வென்று ஆட்டத்தையும் ஜெயித்திருக்கிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி கடைசியாக ஏழு முறை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சேர்த்து கடைசி 8 ஆட்டத்தில் ஒருமுறை மட்டுமே டாசை வென்றிருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.