லக்னோ: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் க்ருணால் பாண்டியா 4 ஓவர்களுக்கு 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் நீக்கப்பட்டு விஜய் சங்கர் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் - சாஹா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முதல் ஓவரை நவீன் உல் ஹக் வீச, இரண்டாவது ஓவரிலேயே ஸ்பின்னரான க்ருணால் பாண்டியா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2வது ஓவரிலேயே ஸ்பின்னர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் கேஎல் ராகுலின் திட்டத்திற்கு ஏற்ப க்ருணால் பாண்டியா வீசிய 2வது பந்திலேயே சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். இதனால் சகோதரர்களுக்கு இடையிலான யுத்தமாக ஆட்டம் மாறியது. எப்படியாவது ஹர்திக் பாண்டியாவை வீழ்த்த வேண்டும் என்று க்ருணால் பாண்டியா ஆவேசமாக பந்துவீசினார்.

இருப்பினும் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை விடாமல் நிதானம் காட்டினார். இதனிடையே குஜராத் அணியின் ஸ்கோர் 10 ஓவர்கள் முடிவில் 71 ரன்கள் சேர்த்தது. இதனால் லக்னோ அணிக்கு விக்கெட்டுகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில், மீண்டும் க்ருணால் பாண்டியா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். 11வது ஓவரை வீசிய க்ருணால் பாண்டியா, அதிரடியாக ஆடிய சாஹா விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 4 ஓவர்களை வீசிய க்ருணால் பாண்டியா வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.