லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. நான்கு இடங்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் குஜராத் அணி 18 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சென்னை அணி தற்போது 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. எனினும் அவர்கள் இன்னும் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் லக்னோ மும்பை அணிகள் மோதும் ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் சிஎஸ்கே கடைசி ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும். அதுவே இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் அது சிஎஸ்கேவுக்கு பெரும் சாதகமாக மாறிவிடும்.
தற்போது மும்பை அதிகபட்சமாக 18 புள்ளிகளை பெறும். அப்படி என்றால் சிஎஸ்கே கடைசி ஆட்டத்தில் வென்றால் 17 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தை பிடிக்க நேரிடும். ஒரு வேளை சிஎஸ்கே தோற்றால் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் இன்று லக்னோ வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள்.
அதேசமயம் கொல்கத்தா, ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இன்று மும்பை வெற்றி பெற்றால் அவர்களுக்கு சாதகம். இதுவரை லக்னோவும் மும்பையும் இரண்டு முறை மோதி இருக்கிறார்கள். இதில் இரண்டு முறையும் லக்னோ அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இதற்கு காரணமாக இருந்த கே எல் ராகுல் தற்போது லக்னோ அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதே போன்று லக்னோவில் உள்ள மைதானம் மிகவும் தோய்வாக இருக்கும். இதில் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் லக்னோ மூன்றிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இது போன்ற தோய்வான ஆடுகளத்தில் மும்பை பேட்ஸ்மேனும் சரியாக விளையாட மாட்டார்கள். இதனால் எந்த அணி ஒரு அளவுக்கு பேட்டிங் சரியாக செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். ஐபிஎல் தொடரில் பல அணிகளின் தலைவிதியை மாற்றக்கூடிய போட்டியாக இது இருக்கும்.