மும்பை : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 158 ரன்களை இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ரோகித், இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் தடுமாறினர் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் போல்ட் ஆனார். பிறகு இஷான் கிஷன் அதிரடியை காட்ட பவர்பிளேவில் மும்பை அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இஷான் கிஷன் அதிரடியாக ஆட முற்பட்டு, பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் வெளியேற, கடந்த ஆட்டத்தில் மும்பையை காப்பாற்றிய திலக் வர்மா 22 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அர்ஷத் கான் 2 ரன்னிலும், ஸ்டப்ஸ் 5 ரன்களில் வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் டிம் டேவிட் மட்டும் அதிரடியாக ஆடி தேண்பாண்டே ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த நிலையில், அவரும் ரஹானேவுடன் கேட்ச் ஆனார். இறுதியில் ஹிர்திக் 18 ரன்கள் சேர்க்க 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகளும், சாண்ட்னர் மற்றும் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.