அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு வழங்கப்படும் பர்பிள் கேப் பந்தயத்தில் குஜராத் அணியின் முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் மோகித் சர்மா வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடப்பு சீசனில் மட்டும் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய மோகித் சர்மா, மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கடந்த சீசனில் நெட் பவுலராக இருந்த மோகித் சர்மா, நடப்பு சீசனில் குஜராத் அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறியுள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி மட்டுமே நடக்க உள்ள நிலையில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் பர்பிள் கேப்பை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் குஜராத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஷமி 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 16 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
குஜராத் அணியின் முக்கியமான மூன்று பந்துவீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதே அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த மூன்று வீரர்களில் ஒருவரே பர்பிள் கேப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள நிலையில், சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் எந்த வீரர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி யார் பர்பிள் கேப்பை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.