மொஹாலி: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகி வெளியேறிய வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
மொஹாலி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் விளாசி அபார வெற்றியை பதிவு செய்தது. கடந்த வாரம் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஸ்டம்புகள் உடைய ஆட்டமிழந்த திலக் வர்மா, இம்முறை அவரது பந்தில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ரசிகர்களின் கவனம் அனைத்தும் அர்ஷ்தீப் சிங் vs திலக் வர்மா இடையிலான யுத்தத்திலேயே குவிந்துள்ளது. ஆனால் சைலென்ட்டாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை அணிக்காக 200வது போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கினார். இதனால் அவரது பேட்டிங் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் ரிஷி தவான் வீசிய முதல் ஓவரிலேயே மும்பை கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 15வது முறையாக ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டாகிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருடன் தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோரும் 15 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த 4 வீரர்களில் யார் 16வது முறையாக டக் அவுட்டாகி முதலிடத்தை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 184 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். சராசரியாக 20.44 மட்டுமே வைத்துள்ள ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட்டும் 129.58ஆக மட்டுமே உள்ளது. மற்ற அணிகளின் தொடக்க வீரர்கள் ஆரஞ்ச் கேப் பட்டியலில் போட்டிபோட்டு வரும் நிலையில், ரோகித் சர்மா மட்டும் டக் அவுட்டான வீரர்களுடன் போட்டிபோட்டு வருகிறார்.