மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடக்கவுள்ள போட்டியில் ரோகித் சர்மா 3 சிக்சர்களை விளாசினால், ஐபிஎல் தொடரில் 250 சிக்சர்களை விளாசும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாட உள்ளது. பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபக்கம் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

நடப்பு சீசனை மும்பை அணி மோசமாக தொடங்கினாலும், அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்று அசத்தலாக ஆடி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அபாரமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களில் நிதானம் காட்டும் ரோகித் சர்மா, சூழலை அறிந்து அதிரடிக்கு திரும்பியுள்ளார்.
இதனால் மும்பை அணியின் ஸ்கோர் விகிதம் வேகமாக உயர்கிறது. 5 போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் சர்மா 135 ரன்கள் மட்டுமே விளாசி இருந்தாலும், பவர் பிளே ஓவர்களில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இன்றையப் போட்டியில் 3 சிக்சர்களை அடிப்பதன் மூலம் ரோகித் சர்மா முக்கிய சாதனை ஒன்றையும் நிகழ்த்த உள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடக்கவுள்ள போட்டியில் 3 சிக்சர்களை ரோகித் சர்மா அடித்தால், ஐபிஎல் தொடரில் 250 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். கடந்த 5 சீசன்களாக ரோகித் சர்மா பெரிய ஃபார்மை வெளிப்படுத்தாத சூழலில், நடப்பு சீசனில் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் ரன்களை சேர்த்து வருகிறார். இதனால் ஹிட்மேனின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.