மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இதனால் சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு மும்பை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். டாஸ் வென்ற பின், மும்பை கேப்டன் ரோகித் சர்மா எதனை தேர்வு செய்வது என்று கேட்க, அதற்கு பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்யுமாறு தெரிவித்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை அணியின் மெரிடித் காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் அணி சார்பாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ரபாடா நீக்கப்பட்டு மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்
பஞ்சாப் அணி விவரம்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, சாம் கரண், ஷாரூக் கான், ஹர்ப்ரீத் பரார், ரிஷி தவான், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்