மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அசர வைத்தார்.
ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் 55 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணிக்கு வழக்கம் போல் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, ரோகித் - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நிலையில், மும்பை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 54 ரன்களை குவித்தது. பின்னர் 9வது ஓவரில் ரோகித் சர்மா கியரை அடுத்தக் கட்டத்திற்கு மாற்றினார். ஆனால் 10வது ஓவரை வீசிய லிவிங்ஸ்டன் பந்தில் ரோகித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் - கேமரூன் க்ரீன் கூட்டணி சேர்ந்து, பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டியது. ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என்று இருவரும் அடிக்க, மும்பை அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 149 ரன்களை எட்டியது. இதனிடையே கேமரூன் க்ரீன் தனது அரைசதத்தை அடித்து அசத்தினார். சிறப்பாக ஆடிய க்ரீன் நேதன் எல்லிஸ் பந்துவீச்சில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதன் காரணமாக மும்பை அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. 18வது ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தில் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. களத்தில் டிம் டேவிட் - திலக் வர்மா இணை இருந்தது. இதையடுத்து எல்லிஸ் வீசிய 19வது ஓவரில் 15 ரன்கள் விளாசப்பட்டது.
இதனால் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட, 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 3வது பந்தில் திலக் வர்மாவின் போல்ட்டை அர்ஷ்தீப் சிங் சிதறடித்தார். இதனால் கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த சூழலில் இம்பேக்ட் பிளேயராக நேஹல் வதேரா களமிறக்கப்பட்டார். ஆனால் 4வது பந்திலும் அர்ஷ்தீப் சிங் மிடில் ஸ்டம்பை உடைத்து அனைவரையும் அசர வைத்தார். கடைசி 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இறுதியாக பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.