அகமதாபாத்: குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அடைந்த தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மாவே முக்கிய காரணமாக மாறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. முதல் இரு போட்டிகளில் சறுக்கினாலும், அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்று மும்பை அணி கம்பேக் கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதற்கு முக்கிய வீரர்களின் காயம் ஒருபக்கம் காரணமாக இருந்தாலும், ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் இன்னொரு காரணமாக அமைந்துள்ளது. ஒரு கேப்டனாக களத்தில் ரோகித் சர்மா ரிஸ்க் எடுக்க தவறுவதும், இளம் வீரர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்க மறுப்பதுமே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது.
நேற்றையப் போட்டியில் பவர் பிளேவின் இறுதி ஓவர் வரை குஜராத் அணிக்கு ரன்கள் பெரிதாக வரவில்லை. இதனால் பவர் பிளேவின் கடைசி ஓவரில் ரன்கள் சேர்க்க நிச்சயம் முயற்சிக்கும் என்பது ரசிகர்கள் உட்பட அனைவரும் அறிந்ததே. அந்த ஓவரில் உள்ளூர் வீரரும், அனுபவ ஸ்பின்னருமான பியூஷ் சாவ்லாவை பயன்படுத்தால், ஷார்ட் பால்களை அதிகமாக வீசும் கேமரூன் க்ரீனை அட்டாக்கில் கொண்டு வந்தது மும்பை அணிக்கு பின்னடைவாக மாறியது.

அதேபோல் பவர் பிளே ஓவர்களில் 2 சிறப்பான ஓவர்களை வீசி வரும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மிடில் ஓவரில் ஒரு ஓவர் கொடுத்து ரிஸ்க் எடுக்க ரோகித் சர்மா தவற வருவதும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. நல்ல யார்க்கர்களையும், நல்ல வேரியன்ஷன்களையும் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னிடத்தில் வைத்துள்ளார். அவரை 10 முதல் 13 ஓவர்களுக்குள் பந்துவீச வைத்து ரிஸ்ட் எடுத்தால், பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்ய போய் விக்கெட் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
இருவேளை அர்ஜுன் டெண்டுல்கர் ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அடுத்தடுத்த போட்டிகளுக்கான பாடத்தை கற்றுக் கொள்வார். ஆனால் மும்பை அணி நிர்வாகம் அர்ஜுன் டெண்டுல்கருக்கு போட்டுக் கொடுத்த திட்டத்தின் படியே ரோகித் சர்மா செயல்படுவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேமரூன் க்ரீனுக்காக சிறந்த ஃபார்மில் இருக்கும் திலக் வர்மாவை மும்பை அணி இழக்க தயாராகிவிட்டது. 3வது இடத்தில் களமிறங்கி வெளுத்து வாங்கி வந்த திலக் வர்மா, கடந்த இரு போட்டிகளாக மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவது அவரின் நம்பிக்கையையும் குலைத்து வருகிறார். ஐதராபாத் மண்ணில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அணிக்காக முன் நின்ற வீரரை ஓரம்கட்டி தேவைக்கேற்ப பயன்படுத்துவது திலக் வர்மாவை மனதளவில் பாதிப்படைய செய்யும். காயமடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்யாமல் தவறு செய்த மும்பை அணி, தற்போது அணியில் உள்ள வீரர்களை பயன்படுத்துவதிலும் சொதப்புவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.