மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அறிமுகமாகியுள்ள அர்ஜூன் டெண்டுல்கருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அவரது அக்கா சாரா டெண்டுல்கர் மைதானத்திற்கு வந்துள்ளார். முதல் ஓவரை அவர் வீசியதால், பதற்றமாக போட்டியை பார்த்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் வயிறு வலி காரணமாக ரோகித் சர்மா விலக, கேப்டன்சி பொறுப்பை சூர்யகுமார் யாதவ் ஏற்றுள்ளார். இந்த நிலையில் டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.
நீண்ட காலமாக மும்பை அணியின் வலைபயிற்சி பந்துவீச்சாளராக இருந்து, பின்னர் அந்த அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டவர். இருப்பினும் இரு ஆண்டுகளாக மும்பை அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதற்கு அவர் இன்னும் திறமைகளை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது என்று ரோகித் சர்மா கூறி இருந்தார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
பலரும் ஐபிஎல் அனுபவம் இல்லாததால், களத்தில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். அதனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இன்றையப் போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அர்ஜூன் டெண்டுல்கர் விளையாடுவதை அவரின் தந்தையும், மும்பை அணியின் ஆலோகருமான சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் இருக்கிறார்.
அதேபோல் அவருக்கு நேரில் உற்சாகம் அளிக்க அக்கா சாரா டெண்டுல்கரும் மைதானத்திற்கு வந்துள்ளார். அவர் வீசிய முதல் பந்து முதலே சாரா டெண்டுல்கர் பதற்றமாக இருந்தார். முதல் ஓவரை சிறப்பாக முடித்த பின்னரே அவரின் பதற்றம் குறைந்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் அர்ஜூன் டெண்டுல்கர் செய்யும் அத்தனை செயல்களையும் அக்கா சாரா டெண்டுல்கரை பாராட்ட தவறியதே இல்லை. அவர் பற்றி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.