மொஹாலி: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா, மும்பை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் பஞ்சாப் அணி வீழ்த்தியதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா நீக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற காரணமாக அமைந்தவர் சிக்கந்தர் ராசா. அவரை பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் இன்றையப் போட்டியில் நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை பெறுவது அதுவே முதல்முறையாகும். இருப்பினும் அடுத்தப் போட்டியில் இருந்து சிக்கந்தர் ராசாவை பஞ்சாப் அணி நீக்கியது.
பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் அசத்தக் கூடியவர் சிக்கந்தர் ராசா. பேட்டிங் அல்லது பந்துவீச்சு என்று இரண்டிலும் அணிக்கு பங்களிக்க கூடிய மேட்ச் வின்னரான சிக்கந்தர் ராசா மீண்டும் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் ஷிகர் தவான் கூறாததால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.