சென்னை: குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில், ஜடேஜா ஆட்டத்தின் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை கைப்பற்றினார். இதையடுத்து ரசிகர்களை கிண்டல் செய்யும் வகையில் ஜடேஜா பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்த நிலையில், குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்த நிலையில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ருதுராஜ் கெய்வாட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதேபோல் பேட்டிங்கில் 16 பந்துகளில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ஜடேஜா. குறிப்பாக ஷனகா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியது குஜராத் அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இதன் காரணமாக ஜடேஜாவுக்கு போட்டியின் மதிப்புமிக்க வீரர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு பின் ஜடேஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
அதில், "Upstox-க்கு தெரிகிறது.. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவதில்லை" என்று ஜடேஜா பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு முறை ஜடேஜா பேட்டிங் செய்ய களமிறங்கும் போதும், தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காக ஜடேஜாவை ஆட்டமிழக்க கோரி ரசிகர்கள் கூச்சலிட்டு வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஜடேஜா ஆட்டமிழந்ததும் விண்ணை எட்டும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் சோகமடைந்த ஜடேஜா, தோனி பேட்டிங் ஆட வர வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் என்னை அவுட் ஆக சொல்கின்றனர்" என ஜடேஜா தன்னிடம் கூறியதாக, அண்மையில் தீபக் சஹர் கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்களை கிண்டல் செய்யும் வகையில் ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.