மும்பை : கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோடை காலத்தில் விருந்தாக அமையும் ஐபிஎல் தொடருக்கு தற்போது 17 வயதாகிறது. கோடை காலத்தில் பள்ளி, கல்லூரி படித்து வந்த நபர்கள் எல்லாம் தற்போது திருமணம் ஆகி குழந்தை பெற்றிருப்பார்கள். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடர் 17வது சீசனை வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்திருக்கிறது.
இந்த நிலையில் முதல் சீசனில் விளையாடிய வீரர்கள் இன்னும் 17 வது சீசனிலும் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? முதல் சீசனில் ஸ்டார் வீரர்களாக இருந்த பலர் தற்போது கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்ற நிலையில் சில ஜாம்பவான்கள் தற்போது வரை விளையாடுகிறார்கள்.

அந்தப் பட்டியலை தான் தற்போது நாம் பார்க்கப் போகிறோம். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான். ஐபிஎல் முதல் சீசனில் டெல்லி அணிக்காக ஷிகர் தவான் விளையாடினார். தற்போது தவான் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
டெல்லி அணியில் ஷிகர் தவான் இருந்தபோது தொடக்க வீரர்களாக கௌதம் கம்பீர், சேவாக் இருந்த நிலையில் தன்னுடைய இடத்திற்காக தவான் போராடினார். ஆனால் தற்போது ஷிகர் தவான் பல்வேறு சாதனைகளை படைத்த ஒரு ஸ்டாராக இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக், தொடக்க சீசனில் டெல்லி அணியில் முக்கிய வீரராக இருந்தார். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பிறகு தினேஷ் கார்த்திக் நல்ல மவுசு இருந்தது. இதை அடுத்து அவர் டெல்லி அணியில் விளையாடினார். அதன் பிறகு பல்வேறு அணிகளுக்கு சென்ற தினேஷ் கார்த்திக் தற்போது ஆர்சிபி அணியின் முக்கிய வீரராக உள்ளார்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக களத்தில் நுழைந்த தோனி, ஐந்து கோப்பைகளை வென்று சென்னையில் தத்துப் பிள்ளையாகவே மாறி இருக்கிறார். தற்போது தோனி தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா.
2008 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணியின் முக்கிய வீரராக இருந்தார். அதன் பிறகு ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார். இந்த 16 ஆண்டுகளில் மும்பை அணிக்கு ஐந்து கோப்பையை டெக்கான் அணிக்கு ஒரு கோப்பையும் ரோகித் சர்மா வென்று இருக்கிறார்.இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது விராட் கோலி.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஆர்சிபி அணியில் இடம் பெற்ற விராட் கோலி, அன்று முதல் இன்று வரை ஒரே அணிக்காக விளையாடி வருகிறார். தன்னுடைய முதல் ஐபிஎல் ஆட்டத்தில் விராட் கோலி விளையாடும் போது, அவர் ஒரு சர்வதேச போட்டியில் கூட களம் இறங்கியது இல்லை. ஆனால் தற்போது உலக கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்குகிறார்.