அகமதாபாத்: குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக தகவல் வெளிவரும் நிலையில், அந்த அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேசில் வில்லியம்சன், சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் இருக்கின்றனர்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாய் கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளுக்கும் இடையில் வீரர்களை மாற்றி கொள்ள டிரேடிங் முறைக்கு கால அவகாசம் நடக்கவுள்ளது. இதற்கான கடைசி நாளான இன்று பல்வேறு அணிகளும் டிரேடிங் முறையில் வீரர்களை பெற்று கொள்ள தீவிரமாக இருந்து வருகிறது.

ஏனென்றால் ஐபிஎல் நிர்வாகத்திடம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும். ஏற்கனவே லக்னோ அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் லக்னோ அணியின் ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும், ராஜஸ்தான் அணியின் தேவ்தத் படிக்கல் லக்னோ அணியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக மீண்டும் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியது. 2 சீசன்களில் குஜராத் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியாவை எப்படி குஜராத் அணி நிர்வாகம் கைவிடும் என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு சீசனுக்கு இடையிலேயே குஜராத் அணி உரிமையாளர்களுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சீசனின் போதே ஹர்திக் பாண்டியா மும்பை அணி நிர்வாகிகளை தொடர்பு கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை வாங்க மும்பை அணி தீவிரம் காட்டியுள்ளது.
ஏனென்றால் மினி ஏலத்திற்கு ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டால், அவரின் தொகை ரூ.20 கோடிக்கும் அதிகமாக செல்லும். இதனால் பஞ்சாப், ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் மும்பை அணியின் திட்டத்தை மாற்றிவிடும் என்பதால், டிரேடிங் முறையில் பெற மும்பை அணி முயற்சித்தது. இந்த நிலையில் ரூ.15 கோடி ஒப்பந்தத்தில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் அடுத்த சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன், சுப்மன் கில், ரஷீத் கான் மூவரில் ஒருவர் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அகமதாபாத் மைதானத்தின் தன்மையும் கேன் வில்லியம்சனின் ஆட்டமும் சரியாக இருக்கும் என்பதால், அவரையே கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அவருக்கு உறுதுணையாக துணை கேப்டன் பதவி சுப்மன் கில் நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.