மும்பை : ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்கள் அட்டவணை வெளியிடப்பட்ட சில நிமிடங்கள், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் இளம் வீரர் இஷான் கிஷன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி மும்பை அணி தங்களது முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

அதனை தொடர்ந்து மார்ச் 27ல் ஐதராபாத் அணியை எதிர்த்து மும்பை அணியும், ஏப்ரல் 1ல் ராஜஸ்தான் அணியை எதிர்த்தும் விளையாடுகிறது. பின்னர் ஏப்ரல் 7ல் டெல்லி அணியை எதிர்த்து மும்பை களமிறங்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்காக காயத்தில் இருந்து மீண்டு ஃபிட்னஸை எட்டியுள்ளார்.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய அணியில் இருந்து விலகிய இஷான் கிஷனும் ஹர்திக் பாண்டியாவுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவுடன் குஜராத் மைதானத்தில் இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் வெளி வந்தாலும், இன்று அவரே ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் அட்டவணை வெளியான சில நிமிடங்களிலேயே இஷான் கிஷன் தனது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுமாறு இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்ட போதும், இஷான் கிஷன் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அமைதி காத்தார். தற்போது ஐபிஎல் தொடர் நெருங்கிய உடன் ஹர்திக் பாண்டியாவுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதன் மூலமாக இஷான் கிஷன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மீது கோபத்தில் இருப்பது வெளிப்படையாக தெரிவதாக சில விமர்சனங்கள் வெளி வந்துள்ளன. ஜனவரி 29ஆம் தேதியில் இருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு கூட செய்யாமல் இருந்த இஷான் கிஷன், ஐபிஎல் அட்டவணை வந்த பின் ஹர்திக் பாண்டியாவுடன் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ரோகித் சர்மா மீதான இஷான் கிஷனின் கோபத்திற்கு தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்ததே என்று தகவல் வெளியானது. அதேபோல் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு ரோகித் சர்மா இதுவரை எந்தவொரு வாழ்த்தையும் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல ரோகித் சர்மா மனைவி ரித்திகாவும் வெளிப்படையாக கொந்தளித்திருந்தார். இதனால் மும்பை அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது.